இன்று(24.11.23) 5 ஆவது நாளாக தொடர்ந்த அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் முற்றுமுழுதாக எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்கள்,குண்டுசிதறல்கள் ஒன்றும் மாக்கர் பேனா ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் அகழ்வு பணியின் 5 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று 24.11.23 முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வு பணிஒருபுறம் நடைபெற்று இருக்க குறித்த பகுதியினை ஆய்வுசெய்வதற்காக கொழும்பில் இருந்து ஸ்கானர் இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 30 மனித உடலங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்கள் போராளிகளின் சீருடைகள்,குண்டுசிதறல்கள்,இலக்கதகடுகள் உள்ளிட்ட பல தடையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன
விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்ட போதும் வீதியின்பக்கம் மற்றும் மற்றைய பகுதிகள் ஆய்வு நாளைதினம் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.