புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் சுடலை காணியினை அடத்தாக பிடிக்கும் தனிநபர்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் அ பகுதியில் உள்ள பொது சுடலைக்காணியின் ஒருபகுதியினை தனிநபர் ஒருவர் அடத்தாக பிடித்து சுத்தம் செய்துள்ளார்.இந்த சம்பவம் கிராமத்தில் மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தேவிபுரம் அ பகுதிக்குரிய சுடலையானது 3.5 ஏக்கர் பரப்பு கொண்ட காணி என பிரதேச செயலகம்,பிரதேச சபையினால் எல்லைப்படுத்தப்பட்டு பிரதேச சபையினால் சுடுகாடு கொட்டகை அமைத்துக்கொடுக்கப்பட்டு கிராம மட்ட அமைப்புக்களினால் பராமரிக்கப்பட்டுள்ளது.
தேவிபுரம்,பாரதிவீதி,கணேஸ்வீதி,புதியகுடியிருப்பு,ஏனைய அண்டிய பகுதிகளில் உள்ள கிராம மக்களின் பயன்பாட்டிற்காக இந்த சுடலை காணப்பட்டுள்ளது.

3.5 ஏக்கர் காணியாக காணப்படும் குறித்த சுடலைக்கு நிதி பற்றாக்குறை காரணமாக அமைப்புக்களால் பகுதிஅளவில் எல்லைப்படுத்தப்பட்டு தூண்கள் போடப்பட்ட நிலையில் அருகில் உள்ள தனிநபர் ஒருவர் அரை ஏக்கர் காணியினை கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து அதனை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் கிராம மக்களால் கிராம சேவையாளர் மற்றும் அமைப்புக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பிரதேச செயலத்திற்கும் காணிப்பகுதிக்கும்,பிரதேச சபைக்கும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Admin Avatar