சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு!

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன்  மீது கடற்படை புலனாய்வாளரால்  தொடரப்பட்ட வழக்கு -தொடர் விசாரணைகளுக்காக  10.10.2024 க்கு தவணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீதான வழக்கு இன்று (29) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது    வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகை தந்து நீதிமன்றில் சாட்சியாளித்தார் இதன்போது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வீ  எஸ் எஸ் தனஞ்சயன் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார் தொடர்  விசாரணைகளுக்காக வழக்கு  10.10.2024 க்கு தவணையிடப்பட்டுள்ளது

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் 20.04.2019 கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் இன்று 29.08.2024 முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது     வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகை தந்து நீதிமன்றில் சாட்சியாளித்தார் தொடர்ந்து ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார் இதனை தொடர்ந்து தொடர் விசாரணைகளுக்காக வழக்கு  10.10.2024 க்கு தவணையிடப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன் போது செல்வபுரம் பேரூந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும்,  ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என வினவியபோது, அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது. குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா என வினவியபோது, அவர் தங்களுடைய நபர் என கடற்படையினர் தெரிவித்ததுடன், அவரை குறித்த இடத்தில் வருகை தந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளரை பழிவாங்கும் நோக்கில் மறுநாள்   மாலை முல்லைத்தீவு காவல்நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அரச கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார்  

இந்த சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Admin Avatar