முல்லைத்தீவில் இராணுவ பேருந்துடன் விபத்து தாயும் மகளும் காயம்!

முல்லைத்தீவு சிலாவத்தை வீதியில் இன்று(10) இரவு இராணுவத்தினரின் பேருந்துடன் மோதிய விபத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளார்கள்.

இரவு மழை பெய்து கொண்டிருக்கையில் சிலாவத்தை பகுதியில் இருந்து உந்துருளியில் பயணித்துக்கொண்டிந்த இளம் தாயும் சிறுமி ஒருவரும் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி வீதியால் சென்று கொண்டிருந்த இராணுவ பேருந்துக்குள் சிக்கியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த சிலாவத்தை பகுதியினை சேர்ந்த இளம் தாயும் சிறுமியும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இராணுவத்தினரின் பேருந்தின் சாரதியினையும் பேருந்தையும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar