Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில்  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றையதினம்(08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு  பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால்  குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது 

இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக இன்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் புதுக்குடியிருப்பு பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர்  அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரிக்கு  வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில்    முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில்  தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக  50 இலட்சத்திற்கும் அதிக  பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிற்கின்றனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *