சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு படைபவனி!


சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (24) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம.வினோத் ஆரம்பித்து வைத்திருந்தார்.

சீயோன் சுவிசேஷ ஜெபவீடு மற்றும் ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் நிறைவாழ்வு அபிவிருத்தி மையம், வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி மையம் ஆகிய அபிவிருத்தி திட்டம் இணைந்து குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருந்தனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை கண்டால் 1929 க்கு அழைப்போம், குழந்தைகள் பாலியல் பொருட்கள் அல்ல, சிறுவர்களை தீய வார்த்தைகளால் பேசுவதை தடுப்போம், சிறுவர்களை மது போதை அடிமையிலிருந்து மீட்போம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது .

குறித்த பேரணியில் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தினர், வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி மையத்தினர், பெற்றோர்கள், சிறுவர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *