கல்வி எமது வாழ்க்கையில் மனிதன் சில திறமைகளைப் பெறுவதற்கும், அதன் வழி தமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் தேவையான உண்மைகளை அறிந்துகொள்வதற்குமாகப் பெற்றுக்கொள்ளப்படும் அறிவுசார்ந்த விடயமாகும்.
இத்தகைய கல்வியை ஆரம்பக்கல்விப் பருவத்திலிருந்து வழங்குவதன் அவசியத்தைக் கல்வியயாளர்கள் கவனத்திற் கொண்டுள்ளார்கள்.
குழந்தையின் முழுமையான மேம்பாட்டிற்கு உதவும் வகையிலான கல்விச் செயற்பாடுகள் இன்றைய காலத்தின் தேவையாகும். அவர்களது உடல், உள்ளம், மெய்யுணர்வு போன்றவைகளின் விருத்திக்கு குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் அறிவார்ந்த செயற்பாடுகள் பெரும் பங்கெடுத்துக்கொள்கின்றன.
இதனால் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு அவற்றிற்குப் பொருத்தமான செயற்றிறன் மிக்க கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தலில் குடும்பம், ஆரம்பக்கல்வி பொறுப்புணர்வுடன் செயற்படுதல் அவசியமானகின்றது.
ஆரம்பக்கல்வி tp (Primary Education) நிலையில் ஆசிரியர்களின் செயற்பாட்டுக் கற்பித்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் இந்நிலையில் மாணவர்களின் அடிப்படை அறிவுத்திறன், பழக்கம், குணநலம் ஆகியவை உருவாகும் காலமாகும். இப்பருவத்தில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள், மாணவர் பங்கேற்பை ஊக்குவித்தல் அவசியமாகும். மாணவர்களை குழுக்களாக்கி செயற்பாட்டு கற்பித்தலின் போது கேட்டு மட்டுமல்ல செய்துபார்த்தும் கற்றுக்கொள்கிறார்கள். இது மாணவர்களின் ஆர்வம், ஈடுபாடு என்பவற்றை அதிகரிக்கச்செய்கின்றது.
செயற்பட்டு கற்கும்போது குழுவாகச் செயற்படுவதுடன் கேள்வி கேட்பதும் சிந்தித்து தீர்வுகளை தேடுவது போன்ற திறன்களை வளர்க்கக்கூடியதாக அமைகின்றது. இத்திறன்கள் வாழ்க்கைக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுகின்றது. அச் செய்து கற்றல் முறையில் மாணவர் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வதனால் நினைவாற்றல் நீண்டகாலம் இருக்கும். மேலும் ஆசிரியர்கள் கேள்விகள் கேட்டு புதுமையான செயற்பாடுகள் கொடுப்பதால் மாணவர்கள் படைப்பாற்றலுடன் சிந்திப்பார்கள். இதன் மூலமாக பிரச்சினை தீர்க்கும் திறன் மேம்படும்.

செயற்பட்டுக் கற்பித்தல் முறையில் மாணவரின் பலம், பலவீனம், ஆர்வம் ஆகியவற்றை ஆசிரியர் எளிதாக கண்டறிய முடிகின்றது. அதற்கேற்ற வகையில் மாணவனை வழிகாட்ட முடியும். குழுவாகப் பணியாற்றும்போது மாணவர்கள் பேசிக்கொள்ள, கருத்துக்களை பகிர்ந்துகொள்ள கற்றுக்கொள்பவர்கள். இது சமூக உறவு மற்றும் மொழி வெளிப்பாட்டை மேம்படுத்தும் செயற்பாட்டுக் கற்பித்தலில் ஆசிரியர் அறிவு கொடுப்பவர் மட்டுமல்ல வழிகாட்டியாக இருப்பார். மாணவர்கள் வேகம், ஆர்வம், திறன் அடிப்படையில் பாடங்கள் நடைபெறுவதால் வினைத்திறன் மிக்கதாக அமைகிறது.
ஆரம்பக்கல்வி சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்திலே ‘தண்ணீர் மாசுபாடு’ பற்றி பற்பிக்கும்போது வெறும் பாடப் புத்தகம் வாசிப்பதற்குப் பதிலாக மாணவர்களை அருகில் உள்ள குளத்திற்கு அழைத்துச்சென்று தண்ணீரின் நிலையை கவனிக்கச் செய்து தாமே மாசு காரணங்களைப் பட்டியலிடச் செய்வது சிறந்த செயற்பாட்டு மாதிரிக் கற்பித்தலாகும்.
ஆரம்பக்கல்வி மாணவர்கள் நீண்டநேரம் அமைதியாக அமர்ந்து கூறுகின்ற அனைத்தையும் அவர்களால் கேட்கமுடியாது. இவர்களின் ஆர்வத்தினை தாங்குவதன் மூலமே கற்பித்தலை செயற்படுத்தமுடியும். இதற்கு செயற்பாடுகள், விளையாட்டுக்கள், சித்திரம், பாடல்கள் போன்றவற்றின் மூலம் கற்றல் கற்பித்தலை நடாத்துதல் அவர்களின் ஆர்வத்தை குறையாது அதிகரிக்கச் செய்யும். அத்தோடு மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
இதன்மூலம் பரிவு, கருணை போன்ற சமூக உணர்ச்சித் திறன்கள் உருவாகும். மாணவர்கள் தாமே செயலில் ஈடுபட்டு தங்கள் பதில்களை வெளிப்படுத்தும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். தோல்வி ஏற்பட்டாலும் மீண்டும் முயற்சிக்கும் பழக்கம் உருவாகும். செயற்பாட்டின் போது கற்ற விடயங்கள் மனம்10, உடல் இரண்டிலும் பதியப்படுவதால் நீண்டகாலம் நினைவிலிருக்கும். இதன் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சி அதாவது உடல், மனம், அறிவு உணர்ச்சி சமூகத்திறன்கள் அனைத்தும் ஒன்றாக மேம்படும்.
செயன்முறை மூலம் கற்றல் என்பது பிள்ளைகள் எதனையும் செய்துபார்த்தல் ஊடாக விளங்கிக்கொள்ளலைக் குறிக்கின்றது. இவ்வகையான கற்பித்தல் முறையில் பிள்ளைகள் துரிதமாகவும் விருப்புடனும் செயற்படுகின்றார்கள். செயன்முறை மூலம் கற்றலை மேலும் வலுவாக்குதலில் கற்பித்தல் உபகரணங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.
எனவே இத்தகைய உபகரணங்களைப் பயன்படுத்தி எதனையும் செயல் வழிகளினூடாக ஆராய்ந்து பார்த்து கற்கும் செயல்பாடே செயல் வழிக் கற்பித்தலின் சிறப்பாக கருதப்படுகின்றது. பிள்ளையின் ஆரம்பப் பருவம் பேச்சு வளர்ச்சிக்கும் உடலுறுப்புக்களின் அசைவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பைக் கொண்ட பருவமாகும். இவ்வாறான நிலையில் பிள்ளைகளை ஓரிடத்தில் உட்காரவைத்துக் கற்பிக்கும் முறை அவர்களது பேச்சுத்திறன்களின் வளர்ச்சி, உடல் உறுப்புக்களின் வளர்ச்சி போன்றவற்றைத் தடைசெய்வதனால் குழந்தைப் பருவத்தில் போதனை முறைக் கற்பித்தல் அவர்களுக்குப் பொருத்தமற்றது எனக் கருதப்படுகின்றது.
அவர்களின் மொழித்திறன்களை வளர்ச்சிக்கும் உடல் அசைவுகள், கற்பனையாற்றல்களும் நினைவாற்றல்கள், சுதந்திர உணர்வு, மகிழ்ச்சியுடன் செயற்படுதல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றுசேர வகிப்பதற்கும் செயன்முறைக் கல்விமுறையே பொருத்தமானது எனலாம்.
T.Nimalan
MRd(Reading), SLIIT