கொக்குத்தொடுவாய் புதைகுழி 40 உடலங்கள் மீட்பு- 3ஆம் கட்டம் அகழ்வு!

கொக்குத்தொடுவாய் விடுதலை போராளிகளின் புதைகுழி 40 உடலங்கள் மீட்பு 3ஆம் கட்டம் அகழ்வு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நாளை 04.07.2024 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இனம் காணப்பட்ட 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதியினை இலங்கைஅரசாங்கத்தின் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம்(ஓ.எம்.பி.) மாவட்டசெயலகம் ஊடாக வழங்கி வருகின்றது.
இவ்வாறு இரண்டு கட்டங்கள் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இலங்கையின் தொல்லியல் துறைஆய்வில் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இதுவரை 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை ராஜ் சோமதேவ அவர்களினால் நீதிமன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் நிதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நாளை 04.07.2024 திகதியில் இருந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
கொக்குத்தொடுவாய் பகுதியில் முதன்மை வீதிக்கு ஓரமாகவே இதுவரை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் வீதிக்கு கீழும் மனித எச்சங்கள் காணப்படுவதாக விசேட ஸ்கானர் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்யப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது
இதேவேளை கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழியில் இனம் காணப்பட்ட அனைத்து உடலங்களிலும் விடுதலைப்புலிகளின் இலட்சினைகள்,சீருடைகள் காணப்பட்டுள்ளன உடலங்களில் துப்காக்கி சன்னங்கள் பாய்ந்தமைக்கான சான்றுகளும் காணப்பட்டுள்ளன.
இதற்கான நீதி விசாரணை தேவை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றார்கள்
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்து சுமார் 30 ஆண்;டுகளுக்கு மேலாக குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Admin Avatar