முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் கடந்த 09.12.2025 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென்அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தின் ஒர் உதைபந்தாட்ட வீரனும் முல்லைத்தீவு மாவட்டத்தின் உதைபந்தாட்ட நடுவராகவும் செயற்பட்ட சிறந்த விளையாட்டு வீரனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 9 ம் திகதி இரணைப்பாலை வீதியில் உந்துருளியில் பயணித்த 31 அகவையுடைய இரணைப்பாலையினை சேர்ந்த அன்ரன் செல்வராசா திலைக்சன் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தில் மோதி விபத்தினை சந்தித்துள்ளார்.
காயமடைந்த குறித்த குடும்பஸ்தர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய கனரக வாகனமும் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு வீதி போக்குவரத்து பொலீசாரால் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சாரதி கைதுசெய்யப்பட்டு 10.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது குறித்த சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் இந்த வழக்கு விசாரணை 13.01.2026 அன்று திகதியிடப்பட்டுள்ளது.





