முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கடந்த மூன்று நாட்காளக நிலவி வருகின்றது.
மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் முல்லைத்தீவு நகர் முள்ளியவளை பிரதேசம் ஒட்டுசுட்டான்,போன்ற பிரதேசங்களில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்கள் மற்றும் முகவர் கடைகளில் எரிவாயு சிலிண்டர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதனால் மக்கள்பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
குறிப்பாக கரையோர பகுதி மக்கள் எரிவாயுவினை நம்பியே தங்கள் சமையல் வேலைகளை செய்துவருகின்றார்கள்.
மழைவெள்ளத்தினால் விறகு கூட எடுத்துக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது பல்வேறு இடங்களுக்கு சென்றும் எரிவாயு கிடைக்காத நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இது தொடர்பில் எரிவாயு விநியோகிக்கும் வணிக நிலையங்களை கேட்டபோது மழைவெள்ளத்திற்கு முன்னர் வந்த எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன என்றும் அதன் பின்னர் எரிவாயு விநியோகம் செய்பவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அவ்வாறு வருவதென்றால் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தான் பெரும்பாலும் எரிவாயு வருவதாகவும் பாலம் உடைத்த காரணத்தினால் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது இந்த பாலம் சீர்செய்யப்பட்டால்தான் எரிவாயு வணிக நிலையங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
மக்களின் இந்த பிரச்சினையினை சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மக்களுக்கான எரிவாயு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
