முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமத்திற்கு இன்றைய தினம் (04.11.2025)விஜயம் மேற்க்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த கலந்துரையாடலானது குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ திலகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இந்த கலந்துரையாடலில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணி பிரச்சினை தொடர்பிலும் தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள மக்களின் வயற்காணிகள் தொடர்பிலும், வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், தண்ணிமுறிப்பு மற்றும் நித்தகைக் குளத்திற்கான பாதைகள் நிர்மாணிப்பின் தேவைகள் தொரபிலும், காணிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பிலும், மேச்சல்தரையின் தேவை தொடர்பிலும் விவசாயிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு பதில் வழங்கிய பிரதியமைச்சர் அவர்கள் தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை படிப்படியாக பெற்றுத்தர முடியும் எனவும் உறுதியளித்தார்.
அதேநேரம் காணிவிடுவிப்பு, யானை வேலி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு, தெங்குப் பயிர்ச்செய்கையின் ஊக்குவிப்பு, விவசாய மானியம், கட்டுப்பாட்டு விலையில் நெல் கொள்வனவு, தானியப் பயிற்செய்கை அதற்கான சந்தை வாய்ப்பு முதலான விடயங்கள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகததர்கள், கிராம அலுவலகர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

