முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் அரச நிர்வாக சேவையில் அதி விசேட தரத்திற்கு தரம் உயர்வு பெற்றுநாளைய தினம்(10) வட மத்திய மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் ஆக பதவி உயர்வு பெற்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இவருக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்றைய தினம் (09) பி.ப 1.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
அரச நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த இவர் வவுனியா மாவட்டத்தின் தொழில் துறை திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், வடக்கு மாகாண தொழில்துறை திணைக்களம் பிரதி ஆணையாளராகவும் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளராகவும் மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகவும் பதில் அரசாங்க அதிபராகவும் முல்லைதீவு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராகவும் இருந்து மிகவும் சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இந்த சேவை நலன் பாராட்டு விழாவில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு எஸ். ஜேய காந்த், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. சற்குணேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ரஞ்சித் குமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உதவிச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்து சேவை சிறக்க வாழ்த்திப் பாராட்டினார்கள்



