Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

இந்தியஇழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு – போராட்டம்!

24.11.23 இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்களும் யாழ்பாண கிராமிய கடற்தொழில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்திய இழுவைப்படகுகளை தடைசெய்யகோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி மனு கையளித்துள்ளார்கள்.

வடக்கு கடலில் இந்திய இழுவைப்படகுகளை உடனடியாக தடைசெய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட செயலயத்திற்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுகையளித்துள்ளார்கள்.

இந்தியன் இழுவைமடிப்படகின் எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கான மனு மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளார்கள்

அந்த மனுவில்  எமது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளனமானது தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருவது யாதெனில், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களாகிய நாம் கடந்த பத்து வருடங்களாக இந்திய இழுவைமடிப்படகு மீனவர்களின் அத்துமீறிய எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக மீன்பிடி அமைச்சரான கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா ஐயாவிற்கும் தங்களுக்கும் பல தடவைகள் நேரடியாகவும் எழுத்து மூலமும் தரப்பட்ட மனுக்களுக்கு தங்களதும் கௌரவ அமைச்சரதும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதனைத் தங்களுக்கு இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்தியன் இழுவைமடிப் படகுகளின் எல்லைதாண்டிய சட்டவிரோத மீன்பிடியை மேற்கொள்வதால்:

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிப்படைந்த நிலையில் வாழ்வா சாவா எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது கடல்வளமான மீன்பெருக்கத்திற்கு உதவும் பவளக்கொடிகள் மற்றும் பிற கடல்வளங்களும் அழிவடைந்த நிலையில் உள்ளது.

எமது எதிர்காலச் சந்ததியினரை ஒழிப்பதற்காக பெருமளவான கேரளக் கஞ்சா போன்ற உயிரைக்கொல்லும் சட்டவிரோத போதைவஸ்து வகைகளையும் இங்கே அவர்கள் கொண்டுவந்து எமது சந்ததியினரை அழிக்கின்ற தீயசெயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகள் தொடருமானால் நாம் எமது கடலையும் கடல் வளத்தினையும் மற்றும் வாழ்வாதாரத்தினையும் இழந்து யாருமற்ற ஏதிலிகளாக வாழ்ந்து சாவதைவிட எமக்கு வேறு வழியில்லை. ஆகவே இனியும் தாங்கள் தாமதிக்காது இச்சட்டவிரோத செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துவதற்கு பொருத்தமானவர்களுக்கு கட்டளையிடும்படியும், நாம் தங்களிடம் கேட்டுக்கொள்வதற்கு தங்களுக்கு தார்மீகப்பொறுப்பு உண்டென்பதையும் இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

மனுவின் பிரதிகள் 

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் பணிப்பாளர் நாயகம் – கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் – கொழும்பு,

இந்தியத் தூதரகம் -யாழ்ப்பாணம்

கடற்படைக் கட்டளைத் தளபதி -வடக்கு மாகாணம்,கடற்படைக் கட்டளைத் தளபதி – கிழக்கு மாகாணம்,மாவட்டச்செயலாளர் – கச்சேரி முல்லைத்தீவு ,கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் – முல்லைத்தீவு மாவட்டம் ஆகியோருக்கான மனுக்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்ரன் அவர்களிடமும் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களிடத்திலும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *